இராஜஇராஜேஸ்வரி அவர்கள் வழங்கிய விருது

இராஜஇராஜேஸ்வரி  அவர்கள்  வழங்கிய  விருது

Saturday 30 July 2011

நல்லன எல்லாம் -நீ நீ நீயே .........

தொட்டுக்காட்டமல்
வளர்ந்தவன் -நீ

இந்த ........
சமூகம்
கற்றுக்கொடுக்காமல்
தேர்ந்தவன் -நீ

நாளும் பட்டுத்தேரியவன்
நீ

உள்ளத்தில்
பட்டதைச்  சொல்பவன் -நீ

நல்லன
மட்டுமே கற்றவன் -நீ

இந்நாடே
போற்றவேண்டியவன் -நீ

புதிய
பாதையை
சமைத்தவன் -நீ

பெண்மையை
மதிப்பவன் -நீ

நல்லன
எல்லாம் -நீ  நீ  நீயே .........


Saturday 23 July 2011

அன்பே நம்வளமான வாழ்வைமட்டுமே சிந்திப்பாயா?

 நம்
பண்பாட்டைப்
பேணுவதில்
உன் சர்வாதிகாரத்தை
வெளிப்படையாய்
அறிவித்தாய் .

கல்லூரிப் பெண்கள்
 விட்டில் பூச்சிகளாக
மடிவதாய்
வருத்தபட்டாய்.

முதலாளித்துவ
இன்றைய
அரசுகள்
குடும்ப உறவுகளை
நசுக்குவதாய்
சினம்  கொண்டாய் .

ஊடகங்களும்
திரைப்படங்களும்
சீரழிவின்
கொம்புகளை கூர்
சீவிவிடுவதாய் 
குற்றம்  சாட்டினாய்.

நம் மொழி
அழியுமுன்னம்
இனமழியும்
என்றாய் .

நம் கலைகள்
காப்பது மட்டுமே
இப்போதைய
தேவை  என்றாய் .

அன்பனே
இதையெல்லாம்
பேசி வறுமையோடு
வாடியவர்களின்
பட்டியலில்
சேரப் போகிறாய் .

கொள்கைக்காக
மரித்துபோவதையும்
மறந்துபோகும்
சீக்காளி சமூகமிது
அன்பே
நம்வளமான
வாழ்வைமட்டுமே

சிந்திப்பாயா?


Saturday 16 July 2011

இதுதான் அரசுகளின் அறமா?


ஒரு
இனத்தின்
விடுதலை வேட்கை
எங்கனம்
தீவிரவாதமாகும்?

என்
இனப்பெண்களின்
மார்பகம்
எங்கனம்
வெடிகுண்டாய்
மாறும்?

சிங்கள நாய்கள்
சோதித்து பார்த்ததாம் .

உலகத்தீரே
இதுதான் அறமோ?

மனித உரிமைகளை
வாய்கிழியப்  பேசும்
போலிக்கனவான்களே!

பச்சைக்குழந்தைகள்
பாசமிகு முதியோர்
சூலுற்ற  பெண்கள்
இருந்த இடங்களில்
பாஸ்பரஸ்
குண்டுமழை ...
பொழிந்து கொன்றது
எந்த நாட்டு
அரச நீதி ?

இவர்களை  கொல்ல
எவன்கொடுத்தான்
அதிகாரம் ?

சிங்கள
நாய்கள் எப்படி
என்னினத்தை
வேட்டையாடியது ?

உலக
தமிழ் அறிஞர்களே !
நீவீர்  ஏன்
இன்னும்
ஈழத்தமிழரை
அழித்தவர்களை 
அறம்பாடி அழிக்கவில்லை ?

அரிதாரம்
பூசாத என்
வார்த்தைகள்
உங்களை வசப்படுத்தாமல்
போகலாம்.

ஈழத்தில்
நடந்த போர்குற்றங்கள்
இந்த உலகின்
செவிட்டுக்காதுகளுக்கும்
குருட்டுக் கண்களுக்கும்
இன்னுமா புரியவில்லை ?

     இந்த வசனத்தின் காரணம்  ஐயா  வைகோ  அவர்கள்  கல்லுரி  வாசல்களில்  நின்று  வழங்கிய  குறுவட்டை பார்த்ததால்  எழுதப்பட்டதாகும் .

Saturday 9 July 2011

கற்றுக்கொடுக்காதபோதும் ....

நானும்  சராசரி
பெண்தான் .

என்னுள்ளும்
ஆயிரமாயிர
போராட்டங்கள் .

பலமுனையிலிருந்தும்

நெருக்குதல்கள்.
தாக்கு பிடிக்கயியலா
எத்தனையோ
சுமைகள்
கொடுமைகள் .

வறுமையோடு
போராடுவது
தற்கொலைக்கு
ஒப்பானது .

வழ்கையினுடனான
எனது போராட்டத்தில்
நானே  தலைமை
தாங்குகிறேன் .

நானே வீரனுமாகிறேன் .

தோல்வி  காணும்
போது எல்லாம்
எவரும்
ஆறுதால்  கூறவுமில்லை.
தட்டிக்கொடுத்து
உற்சாக படுத்தவுமில்லை
 இதற்காக
நான் ...
கலங்கியதுமில்லை.

இந்த  சமூகம்
கற்று கொடுக்காத
போதும்
கட்டைவிரலை
கேட்கிறது .

Saturday 2 July 2011

முலை திருகி எரிந்து கொன்றழிக்கவும் ...

போலித்தனமில்லா
உன்னுடனான
தொடர்புகளை
நான் நாளும்
உணர்வதால்
இந்த  குமுகம்
குற்றமுடையதுதான்
என்பதை
புரிந்து  கொள்ள
முடிகிறது  என்னவனே ...

பொய்யும்  வழுவும்
அரசபீடம்  ஏறுகிறது
என்பதும் ...

நேர்மையும்
 அர்பணிப்பு களும்
அலட்சியம்
செய்யபடுகிறது
என்பதான
உங்கள்  ஆதங்கம்
நியாயத்தை
உணர்த்துகிறது அன்பே ...

அதற்காக நான்
பொதுநல 
வாதியாகிட
முடியாது .

நான் தன்னலம்
எண்ணம்  கொண்டவள் தான் .

நேர்மை பேசி
நீ ...
அழிவதை
ஏற்றுக்கொள்ள முடியாது .

அதையே ...
வேடிக்கை  பார்க்கும்
கையாலாகாத
இந்த சமூகத்தை
முலைதிருகி எரிந்து
கொன்று  அழிக்கவும்
என்னுள்ளம்
ஒப்பாது  ...

மன்னவனே
இந்த மாக்கள்
கூட்டத்தை விடுத்து
திக்கு தெரியாத
காட்டிற்குள்
சென்றாகிலும்
நம்...
வாலிபத்தின்
வசந்தத்தை
தேடுவோம்   வா .